உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 1
கிராமத்துக் கீற்றுக் கொட்டகையில் அன்னக்கிளி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
திரைப்படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் செவ்வாய், தன் தோழி ருக்குவுடன்
வருகிறாள்.
ருக்கு: என்னாடி படம் இது? ஏதோ வேலை செஞ்சுட்டு ஓச்சலா வந்து உக்காந்தா, தமாசாப் பொளுது போகுமேன்னு பாத்தா, வெறும் அளுவைப் படம். இந்த அளுவதான் நமக்கு
வீட்ல எப்பவுமே இருக்கே! அதைக் காசு குடுத்துக் கொட்டாயில வந்து பாக்கணுமாக்கம்!
ஏதோ ஆட்டம், பாட்டம், காதல் ஜோடி, கலர் கலரா சீனு, சுருளி மனோரமா தமாசு இதெல்லாம்
இருக்குமாங்காட்டியும்னு வந்தா... சே! ஒரே அளுவைப் பொணம்டி! படம் பாத்துட்டு
வெளியில வரப்ப, ஒரு சந்தோசம் இருக்கா, பாரேன்.
செவ்வாய்: ஆட்டம் பாட்டம்தான் எல்லாப் படத்திலேயும் இருக்கே ஏதோ ஒண்ணு ரெண்டு
படம் இப்படி சோகமா இருந்தா என்ன குறைஞ்சு போயிடும்? இந்தப் படம் பட்டணக் கரைங்கள்ள
மாசக்கணக்கா ஓடிச்சுன்னு பேசிக்கறாங்களே!
ருக்கு: ஆங்! பட்டணக்காரங்க பேச்சைக் கேளு. அவங்களுக்கென்ன?எத்தையாவது சொல்லி நம்மைப் படம் பாக்க வச்சுக் காசு பண்ணிட்டா சரிதான். ஏன், பாகவதர் படம் கூடத்தான்
அந்தக் காலத்தில ஒரு வருஷம் ஓடிச்சுன்னு சொல்லுவாங்க. அதுக்காக, நீயும் நான்
உக்காந்து அந்தப் படங்களைப் பாக்க முடியுமாக்கும்?
செவ்: இப்ப இந்தப் படத்துக்கு என்ன குறைச்சல்ங்கற நீ?
ருக்கு: அடி போடி! எனக்கு மனசு ஒரே விரக்தியாப் போச்சு. நம்ம அளுவை போதாதுன்னு
மத்தவங்க அளுவை வேற. பாவம், அந்தப் பொண்ணு. அதைப் போட்டு அப்படி மிதிச்சுட்டுப்
போறாங்களே, சொரணை கெட்ட எருமை மாடுங்க...ஆமாம், உனக்கு இந்தப் படம் புடிச்சிருக்கா?
செவ்: படம் புடிச்சிருக்கோ என்னவோ, அந்த வாத்தியார் புள்ளையைப்
புடிச்சிருக்கு. நம்ம ஊருக்கும்தான் பட்டணக் கரையிலேந்து எவ்வளவோ பேர் வராங்க.
நம்மளை மதிச்சு மொகம் கொடுத்து யாராவது பேசறாங்களா? ஏதோ நாமெல்லாம், கீழ்ப்பட்ட
சனங்க, படிக்காதவங்க, அன்னாடம் கூலி வேலை செஞ்சு பொழைச்சுக்கிட்டு, கஞ்சியைக்
குடிச்சுட்டு, வேலை செஞ்ச அலுப்பிலேயே அசந்து தூங்கிட்டுக் காலத்தை ஓட்டறவங்க..
இதுக்குமேல நம்மைப் பத்தி யாராவது நெனைச்சு கவலைப்படறாங்களா? இந்தப் படத்திலயாவது
அந்த வாத்தியாரு அன்னத்தை அவ்வளவு தூரம் லட்சியம் பண்ணிப் பேசிக் காதலிச்சு, அவளை
உசிரா நெனைக்கறாரே, அதைச் சொல்லு. கண்ணாளம் கட்டிக்காட்டா என்ன, இவ்வளவு தூரம் அவ
மேல ஆசை வெச்சதே பெரிசில்லையா?
(ருக்கு பகீரென்று பெரிதாகச் சிரிக்கிறாள். இப்படிப் பெரிதாக அடிக்கடி சிரிப்பது அவள் இயல்பாக இருக்கிறது.)
ருக்கு: அடியே, செவ்வா! சரியா ஆளுடி நீ! அந்த அன்னத்துக்கு ஒரு வாத்தி கிடைச்ச
மாதிரி, ஒனக்கும் ஒரு பட்டணத்துக்காரன் கெடைப்பானான்னு ஏங்கற போலருக்கு!
செவ்: போடி. அப்படி ஒண்ணும் இல்ல. படத்தோட கதையைப் பத்திச் சொன்னேன். நமக்கு
ஏண்டி இது மாதிரி ஆசையெல்லாம்? நம்ம சோலியைப் பாத்துக்கிட்டு நாம தேமேன்னு
இருக்கறப்பவே, நம்ம ஊர்ல நாலு தடிப்பசங்க நம்மை சீண்டிப் பாக்கறாங்க. இந்த
இருப்பில, இப்படியெல்லாம் வேற ஆசைப்படணுமா? சரி. ஒன் வீடு வந்துடுச்சு. எங்கே,
என்னோட வந்துக்கிட்டே இருக்க? தூக்க மயக்கமா? இல்ல, மனசில ஏதாவது கோட்டை
கட்டிக்கிட்டு வரியா? போடி வீட்டுக்கு.
(ருக்கு பிரிகிறாள். செவ்வாய் சற்று தூரம் நடந்து தன் குடிசைக்குள் நுழைகிறாள். வீட்டில் தூக்கம் கலையாமலேயே, அவள் தந்தை வீரப்பனின் குரல் கேட்கிறது. ‘என்ன புள்ள, படம் விட்டுட்டாங்களா?’
செவ்வாய் ‘ஊம்’ என்று முனகி
விட்டுப் படுத்துக் கொள்கிறாள்.
தூக்கம் வராமல் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கிறாள். ‘அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரி பின்னணியில் ஒலிக்கிறது.
கனவு போல் ஒரு தோற்றம்.
அவள் மணமகளாக அலங்கரிக்கப்பட்டு நின்று, சுற்றுமுற்றும் பார்க்கிறாள். உருவம்
இல்லாமல், பேண்ட், சட்டை, ஷூ, சிகரெட், தோளில் ஒரு பை இவை மட்டும் தெரிய, சட்டைக்
கைகள் நீண்டு இவள் கழுத்தில் மாலையிட்டு இவளை அணைத்துக் கொள்கின்றன.


No comments:
Post a Comment