உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 16
குரல்: அங்கே கையை விட்டுப் பிரயோசனம் இல்ல, செவ்வா! பாம்பு புத்தில இல்ல.
(செவ்வாய் கையை இழுத்துக் கொண்டு திருக்கிட்டுத் திரும்புகிறாள். அங்கே பூசாரி நிற்கிறார்.)
பூசாரி: அதோ பாரு. கையைக் காட்டுகிறார். செவ்வாய் திரும்பிப் பார்க்க, புற்றிலிருந்து சற்றுத் தள்ளி பாம்பு படமெடுத்து நிற்பதைக் கண்டு, சற்றே திடுக்கிட்டுப் பின் வாங்குகிறாள்.)
பூசாரி: பாத்தியா? பாம்பு இப்பதான் புத்துக்கு வருது. ஏம்மா, ஒரு நாள் தவறாம நீ ஊத்தற பாலைக் குடிக்கற அந்தப் பாம்பு ஒன்னைக் கடிச்சுடுமா? அவ்வளவு மோசமா நன்றி கெட்டு நடந்துக்கறதுக்கு, அது என்ன மனுஷ ஜாதியா? இல்ல, நீ கும்பிடற இந்த அம்மன்தான் ஒன்னை அப்படிச் சாக விட்டுடுவாளா?
(செவ்வாய் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.)
பூசாரி: என்னம்மா, செவ்வா? என்ன ஆச்சு ஒனக்கு? சாகணுங்கற நெனப்பு வர அளவுக்கு அப்படி என்ன நடந்துடுச்சு?
(செவ்வாய் பதில் சொல்லாமல் அழுகிறாள்.)
பூசாரி: இங்க பாரும்மா! ஒன் கஷ்டடத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதைப் பத்தி நாலு பேர்கிட்ட வம்பு பேசறதுக்காக நான் கேக்கல. என்னால முடிஞ்சா, ஏதாவது உதவி செய்யறேன். என்னால எதுவும் செய்ய முடியாதுன்னா, தெனம் அம்மனுக்குப் பூசை செய்யறப்ப, 'தாயே! அந்தப் பொண்ணோட கஷ்டத்தைத் தீர்க்க் கூடாதா?'ன்னு கேட்டு ஞாபகப்படுத்திக்கிட்டாவது இருப்பேன். என்னால வேற என்ன செய்ய முடியும்?
செவ்: வேண்டாங்க... என்னை எதுவும் கேக்காதீங்க.
பூசாரி: சரிம்மா. கேக்கல. வா. ஒன்னை வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வரேன்...மறுபடி இது மாதிரி பைத்தியக்காரத்தனம் எதுவும் செய்யக் கூடாது. அம்மன் மேல ஆணையாச் சொல்றேன். வா. போகலாம்.
(செவ்வாய் பூசாரியுடன் போகிறாள்.)


No comments:
Post a Comment