உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 5
(வயலில் பலர் நடவு செய்து கொண்டிருக்கின்றனர்.
பொன்னம்பலம் வரப்பில் குடையுடன் நின்றபடி, ஆட்கள் நடவு செய்வதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார்.)
பொன் (ஆட்களிடம் பொதுவாக): எங்கடா மாடசாமியைக் காணும் ?
(யாரும் பதில் பேசவில்லை.)
பொன்: என்னடா, கேக்கறேன், யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க? டேய் மருதை, நீதானடா அவனோட சினேகமா இருக்கறவன்? என்னடா ஆச்சு அவனுக்கு? காலராவா, வைசூரியா?
மருதை: எனக்குத் தெரியாதுங்கையா.
பொன்: என்னடா தெரியாது? அவங்கிட்ட பயமா? சொல்லேண்டா விஷயத்தை.
இன்னொருவன்: மாடசாமி ஊர்ல இல்லீங்க.
பொன்: எங்கேடா போயிட்டான்?
முதலில் பேசியவன்: டவுன்ல ஏதோ வேலை இருக்குன்னு போயிருக்காருங்க.
பொன்: ஓகோ! டவுன்ல வேலையா? அது என்ன தலை போற வேலை? எங்கிட்ட கேட்டுட்டுப் போறதில்ல? அவன் இஷ்டத்துக்கு வந்து போறதுன்னா, நான் மட்டும் அவனுக்கு தெனமும் வேலை கொடுக்கணுமா? வரட்டும். நாலு நாளைக்கு வேலை இல்லேன்னு சொல்லி வயத்தில அடிச்சாதான் வழிக்கு வருவான்... ஆமாம், டவுனுக்கு எதுக்குப் போயிருக்கான்?
(யாரும் பதில் சொல்லவில்லை)
பொன்: டேய் முத்து! நீதானேடா சொன்ன, அவன் டவுனுக்குப் போயிருக்கான்னு? எங்க போயிருக்கான்னு தெரிஞ்சவனுக்கு, எதுக்குப் போயிருக்கான்னு தெரியாதா? சொல்றா!
முத்து: இல்லீங்க..எங்கிட்ட சொல்லலீங்க....டவுனுக்குப் போகப் போறேன்னு மட்டும்தான் சொன்னான்.
பொன்: தோலை உரிக்கணும்டா ஒன்னை!...நீ சொல்லாட்டா எனக்குத் தெரியாதா? டவுன்ல இன்னிக்குக் கட்சி மாநாடு நடக்குது. அதுக்குத்தான் போயிருக்காரு தொரை! இவர் போய்த்தானே கொடியேத்தி மாநாட்டை ஆரம்பிச்சு வக்கணும்! திங்கறது என்னோட உப்பு. படிக்கறது கட்சியோட வாய்ப்பாடு. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லை. ஒங்களுக்கெல்லாம் பரம்பரையா வேலை கொடுத்துச் சோறு போடறோம் இல்ல? எங்க முட்டாள்தனத்தைச் சொல்லணும்.
(விதவைக் கோலம் பூண்ட ஒரு பெண் பொன்னம்பலத்தின் பின் வந்து நிற்கிறாள். அவர் அவளை கவனிக்கவில்லை.)
வயலில் வேலை செய்பவர்களில் ஒருவன் (தயக்கத்துடன்): ஐயா! ராமாயி வந்து நிக்குதுங்க.
பொன் (திரும்பி): ஓ, ராமாயியா? இப்பத்தான் மகாராணிக்குப் பொளுது விடிஞ்சுதா?
ராமாயி: இல்லீங்க. இன்னிக்கு எங்க அப்பாருக்கு தவசம்ங்க. கோவிலுக்குப் போய், ஐயரை வச்சு தவசம் கொடுக்கணும். இன்னிக்கு என்னால வேலைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். நேத்து நீங்க வயல்லேந்து சீக்கிரமே கெளம்பிப் போயிட்டதால, நேத்திக்கே ஒங்ககிட்ட சொல்ல முடியல.
பொன் (சற்று முகவாட்டத்துடன்): ஓ, சரிம்மா. இதை செலவுக்கு வச்சுக்க. (மடியிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் கொடுக்கிறார்.) நல்ல காரியம். போயிட்டு வா.
(ராமாயி பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவரைக் கும்பிட்டு விட்டு, அங்கிருந்து போகிறாள்.)
பொன் (எல்லோரையும் பார்த்துப் பொதுவாக): பாத்தீங்களாடா? தன்னால வேலைக்கு வர முடியாதுங்கறதை ஒரு பொம்பளை வந்து சொல்லிட்டுப் போகுது. ஒரு பொட்டசிக்குத் தெரிஞ்ச மரியாதை கூட இந்த ஊர்ல இருக்கற மீசை வச்ச ஆம்பளைகளுக்குத் தெரியல. சரி, சரி. கொஞ்சம் சுறுசுறுப்பா வேலையைப் பாருங்க. இன்னிக்கு வேலையே நடக்கல!

No comments:
Post a Comment