உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 15
பொன்: என்ன செவ்வா?
செவ்: கொஞ்சம் அரிசி பொடைக்க வேண்டி இருக்கு. பொடைச்சுட்டுப் போறேன்.
பொன்: நேத்தே பொடைச்சுட்டே போலருக்கே!
செவ்: இல்லீங்க. அரிசி பொடைச்சுட்டேன். தவிடு மட்டும் புடைக்கணும்.
பொன்: சரி. பொடைச்சுட்டுப் போ.
(செவ்வாய் உள்ளே போகிறாள். முறத்தில் தவிட்டை ஒப்புக்குப் புடைத்துக் கொண்டிருக்கிறாள். வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறாள். சற்று நேரத்தில் பொன்னம்பலம் உள்ளே வருகிறார். கூடத்தைக் கடந்து உள்ளே போகிறவரை செவ்வாய் அழைக்கிறாள்.)
செவ்: ஐயா!
பொன்: என்ன செவ்வா?
செவ்: அந்த பெஞ்ச்சுல கொஞ்சம் குந்துங்க. ஒங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
பொன்: என்னம்மா, வீரய்யனுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?
செவ்: இல்லீங்க. இது வேற விஷயம்.
பொன்: சொல்லு.
(செவ்வாய் முந்தானையால் முகத்தின் வியர்வையைத் திரும்பத் திரும்பத் துடைத்துக் கொள்கிறாள்.)
செவ்: ஒண்ணுமில்லீங்க...வந்து...நம்ம சின்னையாவுக்கு எப்ப கல்யாணம் பண்ணப் போறீங்க?
பொன் (சிரித்து): அட! இதைக் கேக்கத்தான் இவ்வளவு யோசனையா? பாத்தியா? நீ கேக்கற. நீ யாரு? ஒரு வேலைக்காரப் பொண்ணு. ஒனக்கு இருக்கற அக்கறை அவனுக்கு இல்லியே! என்ன செய்யறது?...ம்...
செவ் (மென்று விழுங்கி): இல்லீங்க, இப்ப அவரு கல்யாணம் கட்டிக்கத் தயாரா இருக்காருங்க.
பொன்: ஒனக்கு எப்படித் தெரியும்?
செவ்: அது வந்து...அவரு...அவரு...என்னைக் கட்டிக்கறேன்னு சொல்றாருங்க.
பொன்: செவ்வா! பொம்பளைங்களை நான் தொட்டு அடிக்கறதில்ல. இதையே ஒங்கப்பன் கேட்டிருந்தான்னா, அவன் பல்லு மொத்ததையும் பேத்துட்டுப் புதுசா பல்லு கட்டிக்கடான்னு சொல்லிப் பணம் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இருப்பேன்!
செவ்: ஐயா!
பொன்: வாயை மூடுறி! தெருவில நிறுத்திப் பேச வேண்டிய கழுதையை எல்லாம் வீட்டுக்குள்ள கூப்பிட்டு, எனக்கு சமதையா வச்சுப் பேசறேன் பாரு, அது என்னோட தப்பு. மொதல்ல வெளியில போடி!
செவ்: ஐயா!
பொன்: உடனே போயிடு. இல்லேன்னா, எனக்கு வர கோவத்துக்கு, ஒன்னைப் புடவையை உருவிட்டு, வெத்து ஒடம்போட வெளியில தள்ளிடுவேன். பொம்பளையை வேற என்ன செய்யறது? ஆம்பளையா இருந்தா அடிச்சுடலாம்.
செவ்: ஐயா! கொஞ்சம் அளவாப் பேசுங்க. நான் ஒண்ணும் ஒங்ககிட்ட பிச்சை கேக்கல. ஒங்க தம்பிதான் எங்கிட்ட வந்து என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு. அதை ஒங்ககிட்ட கேக்கறதுக்கு அவருக்கு தைரியம் இல்ல. . அதனாலதான், நான் வந்து கேக்கறேன். ஒங்களுக்கு நம்பிக்கை வல்லேன்னா, என் முன்னாடியே உங்க தம்பியை அழைச்சுக் கேளுங்க!
பொன்: ஓஹோ! இவ்வளவு தூரம் என்னை எதித்துப் பேசற அளவுக்கு ஒனக்குத் திமிர் வந்துடுச்சா? ஒங்கிட்ட எனக்கென்னடி பேச்சு? போய், ஒங்கப்பனை வரச் சொல்லு. அவன் தோலை உரிக்கறேன்.
செவ்: ஐயா! மரியாதை தவறிப் பேசறதுக்கு எனக்கு விருப்பம் இல்ல. எங்கப்பாவை இதில ஏன் இழுக்கறீங்க?
பொன் (கேலியுடன்): பொண்ணோட அப்பன்கிட்டதானே சம்பந்தம் பேசணும்? பொண்ணுகிட்டயா பேசுவாங்க?
செவ்: மொதல்ல சம்பந்தம் பேசறதுக்கு ஒத்துக்கங்க. அப்புறம் எங்கப்பாவை அனுப்பி வைக்கறேன். அவர்கிட்ட நீங்க பாக்கு வெத்தலை மாத்திக்கலாம்... மொதல்ல ஒங்க தம்பியைக் கூப்பிட்டு, நான் சொல்றது உண்மையா இல்லியான்னு கேளுங்க.
பொன்: ஓ, அப்படியா? சரி. டேய், தொரை!...அவன் இங்கே இல்ல. அவன் வரட்டும். அப்புறம் பேசிக்கறேன். மொதல்ல, நீ வீட்டுக்குப் போ.
செவ்: இல்லீங்க. அவரு வர வரையிலேயும் நான் இங்கேயே இருக்கேன்.
(பொன்னம்பலம் ஏதோ சொல்ல வாயெடுக்க, , அதற்குள் துரை வீட்டுக்குள் நுழைகிறான்.)
பொன்: டேய் தொரை! அங்கேயே நில்லு. நான் கேக்கறதுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் உள்ளே வா! இதோ நிக்கறாளே இந்தக் கழுதையை, நீ காதலிக்கறியா? அவளை எங்கிட்ட அனுப்பி, ஒன்னோட கல்யாணத்தைப் பத்திப் பேசச் சொன்னியா?
(துரை செவ்வாயையும், பொன்னம்பலத்தையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறான்.)
செவ்: என்ன, சின்னையா? ஏன் தயங்கறீங்க? பளிச்சுன்னு சொல்லுங்க.
பொன்: நீ சும்மா இருடி! டேய், சொல்றா!
துரை: என்னண்ணே இது?
பொன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்றா. இந்தக் கழிசடையை நீ காதலிக்கறியா?
துரை: நான்சென்ஸ்!
பொன்: அப்படிச் சொன்னா, இந்தப் படிப்பறிவில்லாத கழுதைக்குப் புரியாது. தமிழ்ல சொல்லு. நீதான் அவளை எங்கிட்ட அனுப்பி, அவளை ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி கேக்கச் சொன்னியா?
துரை (செவ்வாயைப் பார்த்து): செவ்வா! என்ன ஒளறர நீ? நான் படிக்கிற படிப்பு என்ன? எங்க அந்தஸ்து என்ன? ஒன் நெலைமை என்ன? இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தியா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
செவ்: (திடுக்கிட்டு): சின்னையா!
துரை: ஆங், அப்படிச் சொல்லு. ஒனக்கும் எனக்கும் இருக்கற உறவு இதுதான். நான் சின்னையா, நீ வேலைக்காரி. உன் தகுதிக்கு மேல ஆசைப்படாதே! அப்படியே உனக்கு என் மேல ஏதாவது ஆசை ஏற்பட்டிருந்தாலும், நீ அதை எங்கிட்ட சொல்லி இருந்தா, நானை ஒனக்கு புத்தி சொல்லி அனுப்பி இருப்பேன். அதை விட்டுட்டு், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, என் அண்ணன்கிட்ட வந்தா கேக்கறது?
பொன்: சபாஷ்டா தம்பி! எங்கே என் தம்பி தவறிப் போயிருப்பானோன்னு நான் கூட ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டுட்டேன். உன் உடம்பில ஓடறதும் என்னோட ரத்தம்தாங்கறதை நிரூபிச்சுட்ட. இப்ப என்னடி சொல்ற, பித்தலாட்டக்காரி!
செவ்: ஐயா! உங்க ரெண்டு பேர் உடம்பிலேயும் ஓடறது ஒரே ரத்தம்னு சொன்னீங்களே, அந்த ரத்தம் வேற யாருக்கும் போயிடாம பாத்துக்கங்க. ஏன்னா, எங்க ஒடம்புல எல்லாம் ஓடற ரத்தம் மனுஷ ரத்தம்! நான் வரேங்க. இல்ல போறேங்க!
(செவ்வாய் போகிறாள். அந்தப் பழைய கனவுத் தோற்றம் மீண்டும் அவள் மனதில் வந்து போகிறது. 'அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே' பாடலின் பின்னணியில், பேண்ட், சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்த அந்தத் தெளிவான முகமற்ற உருவம் அவளை அணைக்கிறது. அவளும் அணைக்கிறாள். அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.)

No comments:
Post a Comment