உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 3
அதிகாலை நேரம். எங்கோ தூரத்தில் கோழி கூவுகிறது.
செவ்வாயின் உறக்கத்தில் அதே கனவு.
உருவம் புலப்படாத, நாகரீகமான பட்டணத்து இளைஞன் அவளுக்கு மாலையிட்டு அணைத்துக் கொள்ளும் காட்சி.
அவள் கண் விழிக்கிறாள்.
ஒரு நிமிடம் கண்கள் செருகி, கண்ட கனவில் லயிக்கிறாள்.
மறைந்த கனவை மனதுக்குள் நினைவு கூர முயன்று தோற்கிறாள்.
சட்டென்று விழிப்பு வரக் கண்களைக் கசக்கிக் கொண்டு, பக்கத்தில் பார்க்கிறாள்.
அவள் அப்பா இல்லை.
தூரத்தில் எங்கோ ‘தே’ என்று மாட்டை விரட்டும் ஒலி கேட்கிறது.
அவள் கொட்டாவி விட்டு விட்டு, மீண்டும் படுத்துக் கொள்கிறாள்.
நிலை கொள்ளாமல் இப்படியும், அப்படியும் பரண்டு படுத்து விட்டுப் பிறகு எழுந்து நின்று, சோம்பலுடன் கைகளை முரிக்கிறாள்.
அப்படியே சுவரில் சாய்ந்து உட்காருகிறாள்.
கண்கள் சுழலத் தூக்கம் வந்து, தலை ஆடுகிறது.
காட்சியின் தொடர்ச்சியில் அவளை யாரோ எழுப்புகிறார்கள்.)
எழுப்பியவள்: அடியே செவ்வா! என்னாடி, இப்படி ஒக்காந்துக்கிட்டே தூங்கற? பொளுது விடிஞ்சு எம்மாம் நேரம் ஆச்சு தெரியுமா? வாசத் தெளிச்சுக் கோலம் போட வேண்டாமாடி? எளுந்திருடி
(செவ்வாய் கண் விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.)
செவ்: என்ன செல்லக்கா? அதுக்குள்ளாற எளுப்பி விட்டுட்டியே! ஓ...பொளுது விடிஞ்சிடுச்சு போலருக்கே!
(செல்லக்கா என்று அழைக்கப்பட்ட) செல்லி: அது சரி. இப்பதான் புரிஞ்சுதாக்கும்!
செவ்: இப்பதான் எங்கப்பாரு வண்டி ஓட்டிக்கிட்டுப் போன மாதிரி இருக்கு. அதுக்குள்ள இம்மா நேரம் ஆயிடுச்சே!
(கைகளை உதறிக் கொண்டு, புடவையைச் சரி செய்து கொள்கிறாள்.)
செவ்: ஆமாம், மதுரை ரயில்ல வந்து இறங்கி, டேசன்லேந்து நம்ம ஊருக்கு வண்டியில வந்தா, இங்க எப்ப வந்து சேர முடியும்?
செல்லி: எனக்கு என்னாடி தெரியும்? எனக்கென்ன மதுரையில மளிகை மண்டி இருக்கா என்ன, இல்லை நான் அடிக்கடி மதுரைக்குப் போய் வந்துக்கிட்டிருக்கேனா? நீ எதுக்கு இதைக் கேக்கற? ஓ, நம்ம தொரைத்தம்பி வருதே, அதுக்காகக் கேக்கறியா?
செவ்: ஆங்... அவங்க எப்ப வந்தா எனக்கென்னக்கா? எங்க அப்பாரு பாவம், காலையிலேயை குளூர்ல எந்திரிச்சு, டேசனுக்கு வண்டியை ஓட்டிக்கிட்டுப் போயிருக்காரே, எப்ப திரும்பி வருவாரோன்னு நெனைச்சுத்தான் கேக்கறேன்.
செல்லி: எல்லாம் நேரமானா வராங்க. ரயிலு வந்ததுமே, தம்பியை வண்டியில போட்டுக்கிட்டு வர வேண்டியதுதானே?...அடேடே, வண்டிச் சத்தம் கேக்குதே. ஒங்கப்பாவுக்கு நூறு வயசுதான் போ! நீ அவரைப் பத்திக் கேக்க ஆரம்பிச்ச உடனேயே, டக்குனு வந்து குதிச்சுட்டாரே!
(செவ்வாய் அவசரமாக வாசலில் ஓடிப் போய்ப் பார்க்க, தெருக்கோடியில் வீரய்யன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவது தெரிகிறது.
வண்டி அவள் வீட்டு வாசலில் வந்து நிற்க, வீரய்யன் வண்டியை விட்டு இறங்குகிறான். வீரய்யனின் முகம் சோர்வுடன் இருப்பதை செவ்வாய் கவனிக்கிறாள்.)
செவ்: என்னப்பா ஆச்சு? அதுக்குள்ளாற போயிட்டு வந்துட்டீங்களா? சின்னவரு வந்துட்டாரா?
வீர: இல்லம்மா. வண்டி வந்துது. ஆனா, சின்னவரு அதில வல்ல. நம்ம ஐயா கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னேன். அவரு அப்படியே மூஞ்சி சப்பிப் போய் உக்காந்துட்டாரு. தம்பி வல்லேன்னதும், என்ன ஆயிடுச்சோ என்னவோன்னு ஐயாவுக்கு ஒரே கவலை.
செல்லி: அதுக்கு நீ ஏன் அண்ணே மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு வர? இன்னிக்கு வல்லேன்னா, நாளைக்கு வந்துட்டுப் போகப் போறாரு. அவரு என்ன சின்னப் பிள்ளையா என்ன, காணாமப் போயிடறதுக்கு?
வீர: அதில்ல, செல்லி. தம்பி வல்லைன்னதும் நம்ம ஐயா தவிச்ச தவிப்பு இருக்கு பாரு, அதைப் பாத்ததும்தான் எனக்கு மனசு ஆறல.
செவ்: அவரு வந்துடுவாருப்பா! கெளம்பறதில ஏதாவது தாமதம் ஆயிருக்கும். அதுக்கு நீ ஏன் இப்படி இருக்க? சரி, சரி. உள்ள வா. கொஞ்சம் பளைய சோறு இருக்கு. அதைத் தின்னுட்டு வேலைக்குக் கெளம்பு. எனக்கும் ஐயா விட்டில அரிசி பொடைக்கற வேலை பாக்கி இருக்கு. நானும் கெளம்பணும்.
(வீரய்யன் துண்டை உதறிக் கொண்டு உள்ளே வருகிறான்.)

No comments:
Post a Comment