உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 12
(மாடசாமி தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே செவ்வாய் வருகிறாள். அவளை கவனிக்காமல், மாடசாமி பேப்பரால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான்.
செவ்வாய் அவன் அருகே உட்காருகிறாள். மாடசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான்.)
மாட: அடேடே! செவ்வாயா? என்ன இது ஆச்சரியமா இருக்கு?
செவ்: எதுண்ணே அதிசயம்?
மாட: பாத்தியா? இந்த அண்ணே போட்டுப் பேசறதெல்லாம் வேண்டாம்னு அன்னிக்கே சொல்லி இருக்கேன் இல்ல?
செவ்: ஆமாம், சொன்ன. ஆனா, ருக்குகிட்ட மட்டும் உன்னை அண்ணேன்னுதான் கூப்பிடணும்னு சொன்னியாமே!
மாட: ம்...ஆமாம். அது ஒரு ரெண்டுங்கெட்டான். ஒங்கிட்ட வந்து சொல்லி அழுதுச்சாக்கும்?
செவ்: ஆமாண்ணே, தெரியமதான் கேக்கறேன். ருக்குவைக் கட்டிக்க உனக்கு ஏன் கசக்குது?
மாட: இந்தக் கசப்பு, இனிப்பு பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. அதைக் கட்டிக்க எனக்கு இஷ்டம் இல்ல. அவ்வளவுதான்.
செவ்: அதுதான் ஏன்னு கேக்கறேன்.
மாட: இதுக்கெல்லாம் என்னால காரணம் சொல்ல முடியாது, செவ்வா! என்னைப் பொருத்தவரை, எனக்குப் பொண்டாட்டியா வரவ எனக்கு அனுசரணையா நடந்துக்கணும். எப்பப் பாத்தாலும் எனக்கு எரிச்சல் மூட்டிக்கிட்டு இருக்கற பொண்ணைக் கட்டிக்கிட்டு என்னால போராடிக்கிட்டிருக்க முடியாது. ஏற்கெனவே வெளியில போராட்டம். அதோட, வீட்டிலேயும் போராட்டம்னா என்னால தாங்க முடியாது.
செவ்: ருக்கு நீ நெனக்கற மாதிரி இல்ல. ஒம்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கா தெரியுமா? ஒனக்கு அவளை விட அனுசரணையான பொண்ணு வேற யாரும் கெடைக்க மாட்டாங்க.
மாட: சரி. விடு செவ்வா! நான் கல்யாணம் கட்டிக்கறதுன்னு முடிவு பண்ணினப்பறம், இதைப் பத்திப் பேசலாம்.
செவ்: இது மாதிரி சொல்லித் தப்பிச்சுக்க நான் விட மாட்டேன். கல்யாணம் எப்ப வேணும்னா செஞ்சுக்க. ஆனா, ருக்குவைத்தான் கட்டிப்பேன்னு ஒரு வார்த்தை சொல்லு. நான் இப்பவே இந்த இடத்தை விட்டுப் போயிடறேன்.
மாட: நான் அப்படி சொல்லப் போறதில்ல. நீ வேணா போகாம இங்கேயே இருந்துடு! எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை!
செவ்: ஆமாம், ஒன் மனசில என்னதான் இருக்கு?
மாட: ஆங்...அப்படிக் கேளு. இவ்வளவு நேரம் உன் சிநேகிதி மனசைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தியே தவிர, என் மனசில என்ன இருக்குங்கறதைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை காட்டலியே! இப்பதான் என் மனசில கூட ஏதாவது எண்ணம் இருக்கான்னு புரிஞ்சுக்க முயற்சி செய்யற. அந்த மட்டும் சந்தோஷம். நீ கேட்டதனால, நான் வெளிப்படையாவே சொல்றேன். என் மனசில இன்னொரு பொண்ணை நெனச்சுக்கிட்டிருக்கேன்.
செவ்: அட! ஒன் மனசில இது மாதிரி எண்ணங்களுக்கெல்லாம் கூட எடம் இருக்கா?
மாட: நீங்கள்ளாம் நான் ஏதோ கலகக்காரன், சண்டையைத் தூண்டி விடறதிலேயே குறியா இருக்கறவன்னே நெனச்சுக்கிட்டிருக்கீங்க. எனக்கு ஒரு மனசு இருக்குங்கறதையே நீங்க யாரும் புரிஞ்சுக்கல. மத்தவங்க கஷ்டப்படறதைப் பாத்து என்னால பொறுத்துக்க முடியாததாலதான், நான் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசறேன். இல்லேன்னா, நான் ஒரு தனிக்கட்டையா இருக்கறதுக்கு, ஏதோ ஒரு வேலையை செஞ்சுக்கிட்டு, கிடைக்கிற கூலியில வயிறாறத் தின்னுட்டு, சாராயக் கடையிலேயும், சினிமாக் கொட்டாயிலேயும் குடியிருந்துக்கிட்டு இருக்க மாட்டேனா?
செவ்: ஒன்னோட நல்ல மனசு எனக்குத் தெரியாதா, அண்ணே? ஆனா, ஒரு பொண்ணை நெனைச்சு உருகிற அளவுக்கு நீ இருப்பேன்னு நான் நெனக்கல. ஆமாம். யாரு அந்தப் பொண்ணு?
மாட: அது...அதை இப்ப சொல்ல விரும்பல, செவ்வா! பின்னால ஒரு சந்தர்ப்பத்தில நானே அதை ஒங்கிட்ட சொல்றேன்.
செவ்: இதைத்தான் எங்கிட்ட சொல்றதா ருக்குகிட்ட சொன்னியா?
மாட: ஆமாம். ஒங்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னுதான் நெனச்சேன். ஆனா, என்னவோ ஒரு தயக்கம். அதனாலதான் அந்தப் பொண்ணு யாருங்கறதை இப்ப நான் சொல்லல. ஆமாம், நீ ஏன் ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரி இருக்க?
செவ் (திடுக்கிட்டு): அப்படி எதுவும் இல்லையே1
மாட: இல்ல. ஏதோ இருக்கு. ஒன் கண்ணு செவந்துருக்கு. சரியாத் தூங்கலியா?
செவ்: அ...ஆமாம்...சரியாத் தூக்கம் வல்ல.
மாட: அப்ப ஆஸ்பத்திரிக்குப் போறதுதானே? தூக்கம் வரதுக்கு மாத்திரை ஏதாவது கொடுப்பாங்களே!
செவ்: ஆமாம்...இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பேன். அப்பவும் சரியா வரலேன்னா, தூக்க மாத்திரைதான் வழி... நான் வரேன் அண்ணே! ருக்குதான் பாவம். ரொம்ப ஏங்கிப் போவா.
(செவ்வாய் போகிறாள். மாடசாமி அவளை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறான்.)
மாட (தனக்குள்): செவ்வா! என் மனசில நீ இருக்கறது தெரியாம, இன்னொருத்திக்காக நீயே தூது வரியே!


No comments:
Post a Comment