உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 11
(ஒரு மரத்தடி. மாடசாமி உட்கார்ந்திருக்கிறான். ஒரு மாங்காயைக் கடித்தபடி, ருக்கு வருகிறாள்.)
ருக்கு: அட, நம்ப தலைவரு!
மாட: இதென்ன, தலைவர் அது, இதுன்னெல்லாம் புதுசா இருக்கு?
ருக்கு: ஆமாம். நம்ம ஊர்ல இருக்கற ஒரே தலைவர் நீதானே?
மாட: இங்க பாரு. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. 'அண்ணே'ன்னு கூப்புடு.
ருக்கு: ஆங்! அன்னிக்கு செவ்வா அண்ணன்னு கூப்பிட்டப்ப, எனக்கு இந்த மரியாதையெல்லாம் புடிக்காதுன்னியே!
மாட: ஓ, அதுவா? அன்னிக்கு... (தடுமாறுகிறான்.) ...சரி. அப்ப, என் பேரைச் சொல்லிக் கூப்புடு.
ருக்கு (வெட்கத்துடன்): அது எப்படிக் கூப்பிடறதாம்?
மாட: ஏன்?...சரி. எப்படியோ கூப்பிட்டுத் தொல. ஒன்னோட பேச மனுஷனால முடியாது.
ருக்கு: அப்ப, நீ எப்படிப் பேசற?
மாட: சரி. இப்ப இங்க எதுக்கு வந்த?
ருக்கு: அடங்கப்பா! அதிகாரத்தைப் பாரு. இந்த மரத்தடியை ஒனக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்காங்க போலருக்கு. ஏன், நான் இங்க வரக் கூடாதா?
மாட: சரி, வா. வந்து இந்த மரத்தில தூக்கு மாட்டிக்கிட்டு வேணும்னாலும் தொங்கு. நான் கேக்கல. ஆனா, என் உயிரை எடுக்காதே!
ருக்கு: ஒன் உயிர் எனக்கு எதுக்குய்யா? (தனக்குள்) சே! கொஞ்சம் கூட ஆரதவாப் பேசத் தெரியாத ஆளு. எப்பப் பாரு, எண்ணெயில விழுந்த கடுகு மாதிரி வெடிச்சுக்கிட்டு!
மாட: என்னம்மா முணுமுணுப்பு?
ருக்கு: ஒண்ணும் இல்ல. சரி. மாங்கா திங்கறியா?
மாட: ஒண்ணும் வேண்டாம். எனக்கென்ன மசக்கையா?
ருக்கு: ம்... பேச்சைப் பாரு! மசக்கை வந்தவங்கதான் மாங்கா திங்கணுமா? ஏன், நான் திங்கறேனே! எனக்கென்ன மசக்கையா?
மாட: நான் என்னத்தைக் கண்டேன்?
ருக்கு: ஹேய்! அப்புறம், அளுது ஊரைக் கூட்டிருவேன். என்னப் பேச்சுப் பேசற?
மாட: இந்தாம்மா, மொதல்ல நீ இங்கேந்து போ, இல்லை, நான் எழுந்து போயிடறேன். (எழுந்து செல்ல எத்தனிக்கிறான்.)
ருக்கு: யோவ்! நில்லுய்யா. மாங்கா திங்கறியான்னு கேட்டா, அதுக்குப் போய்க் கோவிச்சுக்கிட்டு எழுந்து போறேங்கறியே! நாளைக்கு ஒன் பொண்டாட்டி ஒன்னை சோறு திங்கக் கூப்பிட்டா, அவளை அடிக்கப் போயிடுவ போலருக்கே!
மாட: ம்..அது என் பொண்டாட்டியா வரப் போறவ பட வேண்டிய கவலை. ஒனக்கேன்?
ருக்கு: யாரு கண்டாங்க? ஒருவேளை நானே ஒனக்குக் களுத்தை நீட்டினா?
மாட: நீ பாட்டுக்கு ஒட்டச்சிவிங்கி மாதிரி கழுத்தை நீட்டிக்கிட்டு நிக்க வேண்டியதுதான். நீட்டின கழுத்துல நான் தாலி கட்டினாத்தானே?
ருக்கு (அழுகையுடன்): ஏன்யா, என்னைக் கண்டா ஒனக்கு இவ்வளவு இளப்பமா?
மாட: இங்க பாரும்மா! நானும் ரொம்ப நேரமா கோவத்தை அடக்கிக்கிட்டிருக்கேன். எங்கிட்ட மறுபடி மறுபடி நீ இது மாதிரி பேசிக்கிட்டிருக்காதே! அப்புறம், ஆத்திரத்தில நான் என்ன செய்வேன்னே தெரியாது.
ருக்கு: தெரியும்யா எனக்கு... நான் ஒரு அனாதை, சாதி தெரியாத பொண்ணுன்னுதானே நீ இப்படிப் பேசறே?
மாட: ருக்கு! நீ அனாதைங்கறதுக்காக நான் ஒன்னை மட்டமா நெனைக்க மாட்டேன். ஒன்னோட ஜாதியை மட்டும் இல்ல, வேற யாரு ஜாதியைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. எனக்குத் தெரிஞ்சு, இந்த ஒலகத்தில ரெண்டு ஜாதிதான் இருக்கு. ஒண்ணு நம்மளை மாதிரி பாடுபட்டு உழைக்கிற பாட்டாளி ஜாதி. இன்னொண்ணு நம்ம உழைப்பில வயிறு வளக்கற முதலாளிங்க ஜாதி.
ருக்கு: ஏன்யா, ஒரு பொண்ணு இவ்வளவு தூரம் மனசைத் திறந்து சொன்னப்பறமும், நீ இப்படி அலட்சியமாப் பேசலாமா?
மாட: நீ மனசைத் தொறந்து கேட்டுட்டேங்கறதுக்காக நான் சரின்னு சொல்லிடணுமா? எனக்குன்னு வேற எண்ணம் இருக்கலாம், இல்ல?
ருக்கு: அது என்னையா, எண்ணம்? அதையாவது சொல்லு.
மாட: அதையெல்லாம் ஒங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது.
ருக்கு: அப்படின்னா, என்னைக் கட்டிக்க வேண்டியதுதானேய்யா?
மாட: ஒன்னோட பெரிய வம்பாப் போச்சே! என்னால ஒனக்குப் புரிய வைக்க முடியாது. நான் செவ்வாகிட்ட சொல்லி, ஒனக்குப் புரிய வைக்கறேன். நீ இப்ப மொதல்ல வீட்டுக்குப் போ.
ருக்கு: போறேன்யா, போறேன். இந்த விஷயம் செவ்வாய்க்கும் தெரியும். இந்த ஊர்ல எல்லாருமே நீதான் எனக்குப் புருஷன்னுதான் பேசிக்கறாங்க.
மாட: அப்படிப் பேசறவங்களை என் முன்னாடி வந்து பேசச் சொல்லு. அவங்க பல்லை ஒடைக்கறேன்.
ருக்கு: ஆமாம்யா! மத்தவங்க பல்லை ஒடைக்கறதிலேயே இரு.... அதான் ஒன் கட்சிக் கொடியில சுத்தியல் படத்தைப் போட்டு வச்சிருக்க போலருக்கு!
மாட: ஆமம், போ. வெவரம் கெட்ட பொண்ணு!... என் கழுத்தை அறுக்குது.
(மாடசாமி போகிறான்.)


No comments:
Post a Comment