உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 14
ருக்கு: இங்க பாருய்யா! கடைசியாக் கேக்கறேன். ஒன் முடிவைச் சொல்லிடு. என்னைக் கட்டிக்கறேனு சொன்னா, சரி. இல்லாட்டா, நான் பாம்புப் புத்துல கையை விட்டுடுவேன்.
மாட: போ! அதைச் செய், மொதல்ல. அந்தப் பாம்பாவது ஒன்னைக் கட்டிக்குதான்னு பாக்கலாம்... சே! இப்பிடியா ஒரு பொம்பளை கல்யாணப் பித்துப் பிடிச்சு அலையும்?
ருக்கு: நான் ஒண்ணும் கல்யாணப் பித்துப் பிடிச்சு அலையல. என்னைக் கட்டிக்கறேன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிடு, போதும். அப்புறம், நீ எத்தனை வருசம் காத்துக்கிட்டிருக்கச் சொன்னாலும், காத்துக்கிட்டிருக்கேன்.
மாட: அடாடா! ஒன்னோட பெரிய தொந்தரவாப் போச்சே! அதோ செவ்வா வருது. அதுதான் சரி, ஒனக்கு. செவ்வா!
(செவ்வாய் அவர்கள் அருகில் வருகிறாள்.)
செவ் (சிரித்தபடி): என்னண்ணே! ருக்குதான் இவ்வளவு தூரம் கேக்கறாளே, சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட வேண்டியதுதானே?
ருக்கு: செவ்வா! நீதாண்டி எனக்குத் தொணை. இந்த ஆளு எனக்குப் போக்குக் காட்டிக்கிட்டே இருக்காரு.
மாட: என்ன செவ்வா இது? நீ கூட இந்த ரெண்டுங்கெட்டானோட சேந்துக்கிட்டு இப்படிப் பேசறியே! நான்தான் அன்னிக்கே என் மனசில இருக்கறதை ஒங்கிட்ட சொன்னேனே!
செவ்: மாடசாமி அண்ணே! நீ ஒன் மனசில யாரையோ நெனச்சுக்கிட்டு இருக்கறதா சொன்னியே தவிர, அது யாருன்னு நான் கேட்டதுக்கு, பதில் சொல்லாம மழுப்பிட்டியே! அதிலேந்தே, ஒன் மனசில யாரும் இல்லேன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ருக்கு ஒரு அப்பாவிப் பொண்ணு. நீயோ எப்பவும் கட்சி கட்டிக்கிட்டு யாரோடயாவது சண்டை போட்டுக்கிட்டு நிக்கற. அதனால, ஒன்னைக் கட்டிக்கிட்டா, அவ சந்தோஷமா இருக்க மாட்டான்னு நெனச்சுப் பேசற போலருக்கு. பொம்பளை மனசு எப்படிப்பட்டதுன்னு ஒனக்குப் புரிஞ்சிருந்தா, நீ அப்படி நெனைக்க மாட்ட. ஒரு பொம்பளை ஒத்தனைப் புருசனா ஏத்துக்கிட்டான்னா, அவனோட சுகத்தையும், கஷ்டத்தையும் பத்தித்தான் நெனப்பாளே தவிர, தன்னோட கஷ்டத்தைப் பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்பட மாட்டாய்யா.
மாட: செவ்வா! நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போனா, என்ன அர்த்தம்? நான் அன்னிக்கு ஒங்கிட்ட சொன்னது முக்காலும் நெஜம்தான். நான் வேற ஒரு பொண்ணை மனிசில நெனச்சுக்கிட்டு இருக்கேங்கறது உண்மைதான்.
செவ்: அப்ப, அது யாருன்னு சொல்லு.
ருக்கு: சொல்லேன்யா? யாரு அவ? அவளை வெட்டிப் போடறேன்!
மாட: (ருக்குவிடம்) தே! சும்மாக் கிட. (செவ்வாயிடம் திரும்பி) செவ்வா! அதை இப்ப சொல்ல முடியாது. ஒங்கிட்ட தனியாத்தான் சொல்லணும்.
ருக்கு: யோவ்! தாலி கட்டப் போற பொண்ணுக்குத் தெரியாம, என்னய்யா ரகசியம் வேண்டிக் கிடக்கு?சொல்றதை இங்கேயே, இப்பவே ஒடைச்சு சொல்லு.
மாட: நீயா நான் தாலி கட்டப் போற பொண்ணு?
ருக்கு: வேற யாருக்காவது நீ தாலி கட்டிடுவியான்னு பாத்துடறேன். யாராவது வந்தா, அவ கழுத்தை வெட்டிப்புடுவேன்யா. கழுத்து இருந்தாதானே, நீ தாலி கட்டுவ?
மாட (கை கூப்பி): அம்மா, தாயே! நீ யாராவது கொலைகாரனாப் பாத்துக் கட்டிக்க. இது மாதிரி கழுத்தை வெட்டற பொம்பளையை எல்லாம் என்னால சமாளிக்க முடியாது.
ருக்கு: யோவ்!சொல்ல வந்ததைச் சொல்லாம, ஏன்யா சுத்தி வளைக்கற? யாருய்யா அந்தச் சிறுக்கி?
மாட: மரியாதையாப் பேசு, ருக்கு. அப்புறம் எனக்குக் கோவம் வரும். (செவ்வாயிடம் திரும்பி) செவ்வா, நான் ஒங்கிட்ட அப்புறமா...
செவ் (இடைமறித்து): இங்க பாருண்ணே! மனசில யாரையாவது நெனச்சுக்கிட்டிருந்தா, போட்டு ஒடைச்சுடு. இல்லேன்னா, நீ தட்டிக் கழிக்கறதுக்காகத்தான் இப்படிச் சொல்றேன்னுதான் நான் நெனப்பேன்.
மாட: சரி. சொல்லிடறேன். (சற்றுத் தயங்கி விட்டு) செவ்வா!நான் மனசில நெனச்சுக்கிட்டிருக்கறது ஒன்னைத்தான்.
(ருக்கு 'யோவ்' என்று கூவி விட்டு அதிர்ந்து நிற்க, செவ்வாய் பெரிதாகச் சிரிக்கிறாள்.)
செவ்: அண்ணே! இது ரொம்ப... என்னால சிரிப்பை அடக்க முடியல...நல்ல வேடிக்கை அண்ணே இது. பிள்ளையார் சாமி கதை தெரியுமா ஒனக்கு? தன்னோட அம்மா மாதிரி ஒரு பொண்ணு கெடச்சாத்தான் கட்டிப்பேன்னாராம். அதனாலதான், அவருக்கு இன்னி வரைக்கும் கல்யாணம் ஆகல. அது மாதிரிதான் இருக்கு நீ பேசறது.
மாட: செவ்வா! நான் சொன்னது...
செவ்: வெளையாட்டுக்குத்தானே? நல்ல வேடிக்கைண்ணே இது! இங்க பாரு, ருக்கு! ஒன் ஆளு ஒன்னை நல்ல ஏமாத்தப் பாக்கறாரு. அவரை விட்டுடாதே! கெட்டியமாப் புடிச்சுக்க.
(செவ்வாய் போகிறாள். ருக்கு 'யோவ், யோவ்!' என்று கெஞ்ச, மாடசாமி தலையில் கையை வைத்துக் கொள்கிறான். )
.png)

No comments:
Post a Comment