உறவுகள் தொடர்கதை
திரைக்கதை
காட்சி 10
பொன்: ஏண்டா தம்பி! படிச்சு முடிச்சுட்டு என்ன செய்யப் போறதா உத்தேசம்?
துரை: படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே! அப்புறம் என்ன செய்யறதுங்கறதை அப்புறம்தான் யோசிக்கணும். என்ன, நல்லதா ஒரு வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆக வேண்டியதுதான்.
பொன்: நீ வேலைக்குப் போயிட்டா, நம்ம நெலத்தையெல்லாம் யாரு பாத்துக்கறது?
துரை: ஏண்ணே? நீ இங்கதானே இருக்கப் போற!
பொன்: இருக்கப் போறேன்தான்! ஆனா, எனக்கப்புறம், நீயும் உன் பிள்ளைகளும்தானே பொறுப்பேத்துக்கணும்? ஒனக்கே வெவசாயத்தில அக்கறை இல்லாததால, ஒண்ணுமே தெரியாம வளர்ந்துட்ட. நீயும் விவசாயத்தில பழகினாத்தானே, ஒன் பிள்ளைகளையும் பழக்க முடியும்? கொஞ்சம் அசந்தா, இந்த ஊர்ப்பசங்க ஒன்னை உசிரோட முளுங்கிடுவாங்க!
துரை: அண்ணே! நானே ஒங்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். தப்பா நெனச்சுக்க மாட்டேன்னு நெனக்கறேன்... நம்ம வயல்ல வேலை செய்யறவங்ககிட்ட நீ ரொம்பக் கடுமையா நடந்துக்கறியாமே!...கேள்விப்பட்டேன்.
பொன்: யார் மூலமா கேள்விப்பட்ட?
துரை: இல்ல, இந்தப் பத்து நாளா பல பேர்கிட்ட பேசினதில, பொதுவா எனக்கு இது புரிஞ்சது. ஆனா, வெளிப்படையா யாரும் சொல்லல. ஒங்க மேல எல்லாரும் விரோதம் பாராட்டற அளவுக்கு அவ்வளவு கடுமையா நடந்துக்கணுமா என்ன?
பொன்: நீ இதைக் கேட்டதில எனக்கு சந்தோஷம்தாண்டா! ஏன்னா, மொதல் தடவையா நம்மளோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கறதில நீ அக்கறை காட்டி இருக்கே! சொல்றேன். நம்மகிட்ட வேலை செய்யறவங்ககிட்ட நான் கடுமையா நடந்துக்கறது உண்மைதான். இல்லேன்னா, அவங்க நம்ம கட்டுப்பாட்டில இருக்க மாட்டாங்க. ஏற்கெனவே, ஊர்ல சில பேரு சங்கம் அது இதுன்னு பேசிக்கிட்டுத் திரியறாங்க. நாளைக்கு வயலை அறுத்து, விளைச்சலை அவங்களே எடுத்துக்கிட்டாக் கூடக் கேள்வி முறை இல்லாம போயிடும். அவங்களை ஒரு பயத்தோட வச்சிருக்கணும். அப்பதான், எதையும் செய்யறதுக்கு முன்னால, பசங்க கொஞ்சம் யோசிப்பாங்க. இந்த ஊர்ல பெரிய மிராசுதார்னு நான் ஒத்தன்தான் இருக்கேன். மத்த சின்ன மிராசுகள்ளாம் நடுங்கிச் சாகறாங்க. என்னைப் பொருத்தவரையிலும், நான் அண்டை அசல் கிராமங்கள்ள கொடுக்கற மாதிரி கரெக்டா கூலியைக் கொடுத்துடறேன். அதைத் தவிர, ஒரு அவசரம், ஆபத்துன்னா, தாராளமா உதவி செய்யறேன். இதுக்கு மேல அவங்க எங்கிட்ட என்ன எதிர்பாக்க முடியும்? நான் யாரையாவது கட்டி வச்சு அடிச்சிருக்கேனா, ஆளை வச்சு ஒதைச்சிருக்கேனா, குடிசைகளுக்கு நெருப்பு வச்சிருக்கேனா, என்ன செஞ்சிருக்கேன்? தொழிற்சாலையில வேலை செய்யறவங்க முதலாளியை மதிச்சு, வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செஞ்சுட்டுப் போறாங்க. முதலாளியைப் பாத்தா சலாம் போடறாங்க. ஏன், அவங்களோட மேலதிகாரிகளா முதலாளி நியமிச்ச ஆளுங்களுக்குக் கூட சலாம் போடறாங்க. ஆனா, நிலச் சொந்தக்காரன்னா, இவங்களுக்கு இளப்பம்! உழறவனுக்குத்தான் நிலம் சொந்தம்னு வீராப்புப் பேச்சு. இதுக்கெல்லாம் எடம் கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் ஒன்னையும் கிராமத்துக்கு வந்துடுன்னு நான் சொல்லிக்கிட்டிருக்கேன்.
துரை: எனக்கு இதெல்லாம் ஒத்து வராதுண்ணே!...ஆமாம், நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டியதுதானே?
பொன்: எத்தனை தடவைடா கல்யாணம் கட்டிக்கறது? பொம்பளை அறுத்துப் போனா, மொட்டை அடிச்சு, மூலையில ஒக்காத்தி வைக்கறாங்க. ஆம்பளைன்னா, அஞ்சாறு பேரைக் கட்டிக்கிட்டாக் கூடத் தப்பு இல்லையா?
துரை: ஒரு பக்கம், பழமையான கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி பேசற. இன்னொரு பக்கம், ரொம்பப் புரட்சிகராமாப் பேசற!
பொன்: இங்க பாரு. இந்தப் பழமை, புதுமை, புரட்சி அப்படின்னெல்லாம் நான் ஆராய்ச்சி பண்றதில்லை. என் மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யறேன். தப்புன்னு படறதைச் செய்யறது இல்ல. அவ்வளவுதான்.
துரை: நீ சொல்ற மாதிரியெல்லாம், பொம்பளைங்க நிலைமை இந்தக் காலத்தில அவ்வளவு மோசமா இல்ல, அண்ணே! அதனால, அதைக் காரணம் காட்டி, மறு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ சொல்றது அவ்வளவு பொருத்தமா இல்ல.
பொன்: எனக்கென்னவோ, மறு கல்யாணம் பண்ணிக்கறது அவசியம்னு தோணல. ஒருவேளை, நீ நிரந்தரமா இந்த கிராமத்தை விட்டுப் போயிட்டா, நம்ம சொத்தைப் பாதுகாக்க ஒரு வாரிசு வேணுங்கறதுக்காக நான் மறு கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுக்கலாம். ஆனா, இப்ப அப்படிப்பட்ட உத்தேசம் இல்ல. அது இருக்கட்டும். நான் ஒரு முட்டாள். நீதான் பிளேட்டை மாத்திப் போடறேன்னா, நானும் கேட்டுக்குட்டே இருக்கேனே! நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?
துரை: படிப்பு முடியட்டும், அண்ணே1
பொன்: படிப்பு கெடக்குது படிப்பு! கல்யாணம் கட்டிக்கிட்டா, அப்புறம் படிப்பு மூளையில ஏறாமப் போயிடுமா என்ன?
துரை: கல்யாணத்துக்கு அப்படி என்னண்ணே அவசரம்?
பொன்: சரி. ஒன் இஷ்டம். இன்னும் எத்தனை நாள் லீவு இருக்கு?
துரை: இன்னும் ஒரு வாரம் இருப்பேன்.
பொன்: (காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பி): யாரு? செவ்வாயா? ஒன் அப்பா இன்னிக்கு ஏன் வேலைக்கு வரல?
செவ்: அதாங்க சொல்லிட்டுப் போக வந்தேன். ஊர்ல என் அத்தை புருசன் செத்துட்டாருன்னு சேதி வந்துச்சு. அதான் அப்பா இருட்டோட கெளம்பிப் போயிட்டாரு. காலையில ஒங்களை எழுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான் எங்கிட்ட சொல்லித் தகவல் சொல்லச் சொன்னாரு.
பொன்: அடாடா! கையில பணம் காசு ஏதாவது எடுத்துக்கிட்டுப் போயிருக்கானா? தங்கச்சி புருசன் சாவுக்குச் சீர் செய்யணுமே!
செவ்: அவர்கிட்ட ஏதுங்க காசு? அங்கே போயி ஏதாவது கடன் வாங்கித்தான் செய்யணும்.
பொன்: சரி, செவ்வா! நீ போய் மாட்டுக்கெல்லாம் தீனி வச்சு, தண்ணி காட்டிட்டு வா. நானும் வயக்காட்டுக்குக் கெளம்பணும். நேரமாயிடுச்சு. ஏண்டா, தம்பி! நீயும் வாயேண்டா என்னோட.
துரை: இல்லேண்ணே! நீ போயிட்டு வா. நான் கொஞ்சம் படிக்க வேண்டி இருக்கு.
பொன்: சரி. வீட்டில யாரும் இல்ல. ஜாக்கிரதை. கதவைத் தாப்பா போட்டுக்க. வீட்டைத் தொறந்து போட்டுட்டு எங்கேயாவது போயிடாதே.
துரை: தாப்பா போட்டுக்கறேன், அண்ணே1
(துரை வாயிற்கதவைத் தாளிட்டு விட்டுத் தொழுவத்துக்கு வருகிறான்.)
துரை: செவ்வா!
செவ் (திடுக்கிட்டுத் திரும்புகிறாள்): நீங்களா!
துரை: யாரு செத்துப் போயிட்டதா சொன்ன?
செவ்: என் அத்தை புருஷன்.
துரை: ஒன் அத்தைக்குப் புள்ளைங்க இருக்காங்களா?
செவ்: ஓ!
துரை: அப்ப ஒன்னைக் கட்டிக்கறதுக்கு ஆள் இருக்குன்னு சொல்லு.
செவ்: ஆமாம், இருக்காங்க. ரெண்டு பசங்களுக்கும் என்னைக் கட்டிக்கறதில போட்டி. (சிரித்து) என் கழுத்தைக் கட்டிக்கிட்டுத் தொங்கினாங்கன்னா, கீழ எறங்கவே மாட்டாங்க.
துரை (சிரிக்கிறான்): ஓ, சின்னப் பசங்களா? அப்ப உனக்கு முறைப்பையன் யாரும் இல்லைன்னு சொல்லு.
செவ்: ஏன் சின்னையா எப்பவும் என் கல்யாணத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்களே, நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறதா உத்தேசம்?
துரை: கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னோட அண்ணன் தெனம் சொல்லிக்கிட்டே இருக்காரு. இப்ப கூட, நீ வரதுக்கு முன்ன அதைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தாரு. (சட்டென்று அவளிடம் நெருங்கி வருகிறான்.) செவ்வா! ஒன் மனசில வேற யாரும் இல்லேன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் என்னைக் கட்டிக்க ஒனக்கு இஷ்டமான்னு ஒன்னைக் கேக்கலாம்னுட்டுத்தானே ஒன்னை இவ்வளவு தூரம் சுத்தி வளைச்சுக் கேக்கறேன். ஒனக்குப் புரியலியா?
செவ் (திகைத்து): சின்னையா! நீங்க...நான் பட்டிக்காடுங்க. ஏழை. ஒங்களை அண்டிப் பொழைக்கறவ. நீங்க படிச்சிருக்கீங்க. ஒங்க படிப்புக்கும், பழக்கத்துக்கும்...
துரை: இங்க பாரு, செவ்வா! இது மாதிரியான பேச்செல்லாம் வேண்டாம். நான் டவுன்ல எத்தனையோ பெண்களைப் பாத்திருக்கேன். அவங்க எல்லாரையும் விட்டுட்டு, ஒன்னைத்தானே வந்து கேக்கறேன். இதிலேந்தே என் மனசு ஒனக்குப் புரியலியா? (அவள் தோள்களை மெதுவாகத் தொடுகிறான். அவள் மனதில் அந்தக் கனவு வந்து போகிறது. சட்டென்று தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.)
செவ்: ஐயா... எனக்கு ரொம்ப...ஒரே குழப்பமா இருக்குங்க...நான் அப்புறமா சொல்றேங்க.
துரை: இதை விட்டா வேற எந்த சந்தர்ப்பம் எப்ப கெடைக்கும்? இந்த கிராமத்தில நாம சந்திச்சுப் பேச முடியுமா? சரி...நான் இப்ப உள்ள போறேன். நீ ஒன் வேலையை முடிச்சுட்டு வா. அப்புறம் ஒன் முடிவைச் சொல்லு.
செவ் (குழப்பத்துடன்): சரிங்க...ஒண்ணே ஒண்ணுங்க...ம்...நீங்க டவுன்ல இருக்கற மாதிரி சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு நில்லுங்க. அப்பவும் இந்த வார்த்தையைச் சொன்னீங்கன்னா, நான் நம்புவேன்.
துரை (சிரிக்கிறான்): அட, இதென்ன செவ்வா? டிரஸ் மாறினா, ஆளும் மாறிடுவாங்களா என்ன? சரியான பைத்தியம் நீ. சரி. உன் இஷ்டம். (சட்டென்று அவளுடைய இடையை அணைத்து, அவள் காதில் முத்தம் கொடுக்கிறான். அவள் காதருகில்) நல்ல முடிவைச் சொல்லு, செவ்வா!)
(செவ்வாய் விதிர்விதிர்த்து நிற்கிறாள்.)
(காட்சியின் தொடர்ச்சியில், செவ்வாய் வீட்டுக்குள் வருகிறாள். கூடத்தில் துரை பேண்ட், சட்டை அணிந்து, கருப்புக் கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறான். கையில் சிகரெட். செவ்வாய்க்கு அந்தப் பழைய கனவு மீண்டும் வந்து, அது நிஜமானதாக உணர்கிறாள்.)
துரை (அவளுடைய கையைப் பற்றி): வா! உள்ளே போய்ப் பேசலாம். தனது அறைக்குள் அழைத்துச் சென்று, கட்டிலில் உட்கார்த்தி வைக்கிறான்.)
துரை: என்ன செவ்வா?
செவ்: ...ஏங்க...நீங்க சொன்னதெல்லாம் நெசந்தானா?
துரை: இப்ப ஒன்னைத் தொடறது கூடவா பொய்? ஒன்னைக் கிள்றேன் பாரு. வலிக்குதா? அப்ப நெசம்தானே?
செவ்: எனக்கு ...என்னவோ... எல்லாம் ஒரே குழப்பமா...நம்ப முடியாம கனவு மாதிரி...நீங்க... நான்... எப்படி?
(துரை மெதுவாக அவளை அணைத்துக் கொள்கிறான். முதலில் சற்றுத் தயங்கும் செவ்வாய் ஒருவித மயக்கத்தில் அவன் விருப்பத்துக்கு ஈடு கொடுக்கிறாள்.)


No comments:
Post a Comment